திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.33 திருமறைக்காடு - திருநேரிசை
இந்திர னோடு தேவர்
    இருடிகள் ஏத்து கின்ற
சுந்தர மானார் போலுந்
    துதிக்கலாஞ் சோதி போலுஞ்
சந்திர னோடுங் கங்கை
    அரவையுஞ் சடையுள் வைத்து
மந்திர மானார் போலும்
    மாமறைக் காட னாரே.
1
தேயன நாட ராகித்
    தேவர்கள் தேவர் போலும்
பாயன நாட றுக்கும்
    பத்தர்கள் பணிய வம்மின்
காயன நாடு கண்டங்
    கதனுளார் காள கண்டர்
மாயன நாடர் போலும்
    மாமறைக் காட னாரே.
2
அறுமையிவ் வுலகு தன்னை
    யாமெனக் கருதி நின்று
வெறுமையின் மனைகள் வாழ்ந்து
    வினைகளால் நலிவு ணாதே
சிறுமதி அரவு கொன்றை
    திகழ்தரு சடையுள் வைத்து
மறுமையும் இம்மை யாவார்
    மாமறைக் காட னாரே.
3
கால்கொடுத் திருகை யேற்றிக்
    கழிநிரைத் திறைச்சி மேய்ந்து
தோல்படுத் துதிர நீராற்
    சுவரெடுத் திரண்டு வாசல்
ஏல்வுடைத் தாவ மைத்தங்
    கேழுசா லேகம் பண்ணி
மால்கொடுத் தாவி வைத்தார்
    மாமறைக் காட னாரே.
4
விண்ணினார் விண்ணின் மிக்கார்
    வேதங்கள் விரும்பி யோதப்
பண்ணினார் கின்ன ரங்கள்
    பத்தர்கள் பாடி யாடக்
கண்ணினார் கண்ணி னுள்ளே
    சோதியாய் நின்ற எந்தை
மண்ணினார் வலங்கொண் டேத்தும்
    மாமறைக் காட னாரே.
5
அங்கையுள் அனலும் வைத்தார்
    அறுவகைச் சமயம் வைத்தார்
தங்கையில் வீணை வைத்தார்
    தம்மடி பரவ வைத்தார்
திங்களைக் கங்கை யோடு
    திகழ்தரு சடையுள் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார்
    மாமறைக் காட னாரே.
6
கீதராய்க் கீதங் கேட்டுக்
    கின்னரந் தன்னை வைத்தார்
வேதராய் வேத மோதி
    விளங்கிய சோதி வைத்தார்
ஏதராய் நட்ட மாடி
    இட்டமாய்க் கங்கை யோடு
மாதையோர் பாகம் வைத்தார்
    மாமறைக் காட னாரே.
7
கனத்தினார் வலி யுடைய
    கடிமதில் அரணம் மூன்றுஞ்
சினத்தினுட் சினமாய் நின்று
    தீயெழச் செற்றார் போலுந்
தனத்தினைத் தவிர்ந்து நின்று
    தம்மடி பரவு வார்க்கு
மனத்தினுள் மாசு தீர்ப்பார்
    மாமறைக் காட னாரே.
8
தேசனைத் தேசன் றன்னைத்
    தேவர்கள் போற்றி சைப்பார்
வாசனை செய்து நின்று
    வைகலும் வணங்கு மின்கள்
காசினைக் கனலை என்றுங்
    கருத்தினில் வைத்த வர்க்கு
மாசினைத் தீர்ப்பர் போலும்
    மாமறைக் காட னாரே.
9
பிணியுடை யாக்கை தன்னைப்
    பிறப்பறுத் துய்ய வேண்டிற்
பணியுடைத் தொழில்கள் பூண்டு
    பத்தர்கள் பற்றி னாலே
துணிவுடை அரக்க னோடி
    எடுத்தலுந் தோகை அஞ்ச
மணிமுடிப் பத்தி றுத்தார்
    மாமறைக் காட னாரே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.34 திருமறைக்காடு - திருநேரிசை
தேரையு மேல்க டாவித்
    திண்ணமாத் தெளிந்து நோக்கி
யாரையு மேலு ணரா
    ஆண்மையான் மிக்கான் தன்னைப்
பாரையும் விண்ணும் அஞ்சப்
    பரந்த தோள் முடியடர்த்துக்
காரிகை அஞ்ச லென்பார்
    கலிமறைக் காட னாரே.
1
முக்கிமுன் வெகுண்டெ டுத்த
    முடியுடை அரக்கர்கோனை
நக்கிருந் தூன்றிச் சென்னி
    நாண்மதி வைத்த எந்தை
அக்கர வாமை பூண்ட
    அழகனார் கருத்தி னாலே
தெக்குநீர்த் திரைகள் மோதுந்
    திருமறைக் காட னாரே.
2
மிகப்பெருத் துலாவ மிக்கா
    னக்கொரு தேர்க டாவி
அகப்படுத் தென்று தானும்
    ஆண்மையால் மிக்க ரக்கன்
உகைத்தெடுத் தான்ம லையை
    ஊன்றலும் அவனை யாங்கே
நகைப்படுத் தருளி னானூர்
    நான்மறைக் காடு தானே.
3
அந்தரந் தேர்க டாவி
    யாரிவ னென்று சொல்லி
உந்தினான் மாம லையை
    ஊன்றலும் ஒள்ள ரக்கன்
பந்தமாந் தலைகள் பத்தும்
    வாய்கள்விட் டலறி வீழச்
சிந்தனை செய்து விட்டார்
    திருமறைக் காட னாரே.
4
தடுக்கவுந் தாங்க வொண்ணாத்
    தன்வலி யுடைய னாகிக்
கடுக்கவோர் தேர்க டாவிக்
    கையிரு பதுக ளாலும்
எடுப்பன்நான் என்ன பண்ட
    மென்றெடுத் தானை ஏங்க
அடுக்கவே வல்ல னூராம்
    அணிமறைக் காடு தானே.
5
நாண்முடிக் கின்ற சீரான்
    நடுங்கியே மீது போகான்
கோள்பிடித் தார்த்த கையான்
    கொடியன்மா வலிய னென்று
நீண்முடிச் சடையர் சேரும்
    நீளவரை யெடுக்க லுற்றான்
தோண்முடி நெரிய வைத்தார்
    தொன்மறைக் காட னாரே.
6
பத்துவாய் இரட்டிக் கைக
    ளுடையன்மா வலிய னென்று
பொத்திவாய் தீமை செயத
    பொருவலி அரக்கர் கோனைக்
கத்திவாய் கதற அன்று
    கால்வி லூன்றி யிட்டார்
முத்துவாய்த் திரைகள் மோதும்
    முதுமறைக் காட னாரே.
7
பக்கமே விட்ட கையான்
    பாங்கிலா மதிய னாகிப்
புக்கனன் மாம லைக்கீழ்ப்
    போதுமா றறிய மாட்டான்
மிக்கமா மதிகள் கெட்டு
    வீர்மும் இழந்த வாறே
நக்கன பூத மெல்லாம்
    நான்மறைக் காட னாரே.
8
நாணஞ்சு கைய னாகி
    நான்முடி பத்தி னோடு
பாணஞ்சு முன்னி ழந்த
    பாங்கிலா மதிய னாகி
நீணஞ்சு தானு ணரா
    நின்றெடுத் தானை அன்று
ஏணஞ்சு கைகள் செய்தார்
    எழில்மறைக் காட னாரே.
9
கங்கைநீர் சடையுள் வைக்கக்
    காண்டலும் மங்கை யூடத்
தென்கையான் தேர்க டாவிச்
    சென்றெடுத் தான் மலையை
முன்கைமா நரம்பு வெட்டி
    முன்னிருக் கிசைகள் பாட
அங்கைவாள் அருளி னானூர்
    அணிமறைக் காடு தானே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com